Wednesday, May 18, 2016

சிவகீதை

எந்த கீதை நினைத்த உடன் முக்தி தருமோ அப்படிப்பட்ட மஹாஉன்னதமான சிவகீதையை பற்றி வியாசரிடம் தான் பெற்ற உபதேசத்தை சூதமாமுனிவர் மற்ற முனிவர்களுக்கு கூறலானார்.

சூதமாமுனிவர் சொன்னது :

முனிவர்களே சிவகீதையை சாதாரண மனிதர்களுக்கு உபதேசம் செய்ய கூடாது. அதை மீறி உபதேசித்தால் தேவர்களுக்கு கோபம், கலக்கம் உண்டாகும். அவர்கள் சாபம் கொடுப்பார்கள். காரணம் யாதெனில், பூலோகத்தில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யும் இல்லறவாசிகள் தான் தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்கு எல்லாம் தரும் காமதேனு பசுக்கள் மாதிரி.

இல்லறவாசிகள் செய்யும் ஹோமத்தில் கொடுக்கப்படும் " அவிர்பாகம் " கொண்டே தேவர்கள் பலம் பெறுகின்றனர். தேவர்களுக்கு விருப்பமான குடிக்கும் பானம், பட்சணம் மற்றும் எந்த உணவானாலும் அது இந்த பூமியில் மனிதர்கள் செய்யும் ஹோமத்தால் தான் கிடைக்கும். ஹோமத்தீயில் அளிக்கும் அவிர்பாகமே தேவர்களுக்கு உணவு.

உணவு சாப்பிடாத மனிதன் எப்படி சோர்வடைகிறானோ அது போல அவிர்பாகம் கிடைக்காத தேவர்களும் தளர்வடைகிறார்கள். இல்லறத்தான் சிவகீதை உபதேசம் பெற்றாலும், சிவபெருமானை நினைத்து வழிபட்டாலும் அது தேவர்களுக்கு பயம் ஏற்படுத்தும். காரணம் மனிதன் சிவனருளால் அவரை வணங்கி, அவர் சரிதத்தை கேட்க, படிக்க விருப்பம் உண்டாகி ஞானம் அடைந்து முக்தியும் பெறுகிறான்.

மனிதன் ஞானியானால் அவன் செய்யும் நித்திய கர்மாக்களான இல்லற தர்மங்கள், ஹோம கர்மங்கள் இல்லாமல் போய்விடும். அதனால் இழப்பு தேவர்களுக்கே அவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்காது.

ஆகவே மனிதன் ஞானியாவதை தேவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எப்படியாவது அவனை தடுத்து இல்லறத்தானாகவே வைக்க பல தடைகளை தந்து ஞானி ஆவதை தடுப்பார்கள்.சிவகீதை ஒருவனை ஞானியாக்கும். அதனால் அதை அறிய விரும்பும் மனிதனுக்கு தேவர்கள் எண்ணற்ற பல தடைகளை உண்டாக்குவார்கள்.

 இத்தகைய தேவமாயை சோதனைகளை வெல்லும் மனிதனுக்கு தான் சிவகீதையின் பூரண பலனான கைவல்ய முக்தி கிட்டும். தேவர்கள் சோதனைகளால் மனிதர்களுக்கு சிவபெருமான் மீது பக்தி ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் அது தேவர்கள் தரும் சோதனைகளால் பாதியில் நின்று விடும். மனிதர்களுக்கு சிவபக்தி ஏற்படாமலும், சிவனார் மீது திடநம்பிக்கை ஏற்படாமலும் இருக்க காரண கர்த்தாக்கள் " தேவர்கள் " தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சூதமாமுனிவர் சொல்ல தேவர்கள் சோதனையிலிருந்து தப்பித்து சிவகதி அடைய என்ன தான் வழி? என்று மற்ற முனிவர்கள் கேட்டனர். அதற்கு சூதர் வழி கூறுகிறார். " கோடான கோடி பிறவிகளில் சம்பாதித்த சிவ புண்ணியங்களால் மட்டுமே சிவபெருமானிடம் பக்தி ஏற்படும்.

 மனிதன் கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், தானம் செய்தல், குளம், கிணறு வெட்டுதல், யாகம் செய்தல் போன்றவற்றில் புண்ணிய பலனை கருதாமல் சிவனாருக்கு அர்ப்பணம் எனும் எண்ணத்துடன் செய்ய வேண்டும். நாம் ஒரு சிவகருவி அவரே நம்மை இயக்குபவர் என்றும், சர்வம் சிவார்ப்பணம் எனும் சிந்தையோடும் செயல்படவேண்டும். அப்போது தான் சிவ புண்ணியம் உண்டாகும். முக்திக்கு வழி பிறக்கும்.
சீதையை இராவணன் அபகரித்து சென்றதும் ஸ்ரீ ராமன் மிகுந்த துயரம் அடைந்து இரவும், பகலும் பசி, தூக்கம் இன்றி புலம்பி கொண்டிருந்தார். பின்பு ராமன் தன் உயிரை விட்டு விட விரும்பினார்.

இதையறிந்து லோபா முத்திரையின் கணவரான " அகத்தியர் " ராமரிடம் வந்தார். அகஸ்தியர் சம்சாரம் துச்சமென்பதை ராமருக்கு போதித்தார். ராமா துக்கப்படாதே, பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய இந்த உடல் ஜடம் என்பதை நீ அறியவில்லையா ? எதிலும் ஒட்டாத, எங்கும் வியாபித்திருக்கும் சத், சித், ஆனந்த வடிவமான ஆத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை.

மலபிண்டமாகவும், ஜட உருவமாகவும் உள்ள இந்த தேகத்திலிருந்து உயிர் போய் விட்டால் இந்த உடல் கட்டைகளோடு எரிக்கபடுகிறது. அழியக்கூடியது உடல் மட்டுமே என்பதை அறியாமல் இருக்காதே. அத்தகைய உடலை பிரிவதால் என்ன துயரம் உள்ளது? ஒரு பெண் அனைத்து அழகுடன் இருந்தாலும், இனிய குரலை கொண்டிருந்தாலும், கண்களில் மன்மத பாணங்களை எய்பவளாக இருந்தாலும் அவளை கண்ட உடன் அவளுக்கு வசப்படும் மூடனுடைய அஞ்ஞானத்தை கூறுகிறேன்.

ஆத்மா ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல. ஆத்மாவுக்கு உருவம் இல்லை. அது எங்கும் நிறைந்துள்ளது. அனைத்து அழகுடனும் காணப்படும் அழகி என்பவள் வெறும் மலபிண்டம், ஜட உருவம் தான் என்பதை அறிந்து கொள்.

ராமா, அவளுடைய தேகத்தை வெறும் தோல் மாத்திரம் என்று அறிந்து அவளை ஒதுக்குவாயாக. பஞ்ச பூதங்கள் சேர்க்கையால் ஆன இந்த உடலில் ஆத்மா வெறும் சாட்சியாக இருக்கிறது.

தேகங்கள் தான் அழியும். ஆத்மா அழியாது. கொலைசெய்பவனோ கொல்வதாக நினைக்கிறான். கொல்லப்படுபவனோ இறப்பதாக நினைக்கிறான். உண்மையில் கொல்வதும், கொல்லபடுவதும் இரண்டும் இல்லை என்பதை அறிந்து உன் உண்மை சொரூபத்தைஅறிந்து துக்கத்தை விடு என்று சொன்னவுடன் ராமர் அகத்தியரிடம் முனிவரே நான் என் மனைவி பிரிவால் துயரம் எனும் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன்.

 அது இல்லை என்று நீங்கள் கூறுவதை நான் எப்படி நம்புவேன்? ஜீவன் துக்கத்தை அனுபவிக்கும் போது அனுபவிப்பவன் என்று ஒருவனும் இல்லை என்று கூறினீர். பிறகு யார் தான் அதற்கு காரணம்? என்றார் ராமர்.

அதற்கு அகஸ்தியர் எந்த மாயையால் உலகம் பிரமிப்படைகிறதோ அந்த சிவனாரின் மாயையே காரணம் என்பதை அறிவது மிக கடினம். மாயைதான் அனைத்திற்கும் காரணம். மாயையை வசப்படுத்தியவரே ஸ்ரீ பரமேஸ்வரர்.

நான்கு அந்தகரணங்களை (புத்தி, மனம், சித்தம், அகங்காரம்) பிரதிபலிப்பவர்களாக ஜீவர்கள் தத்தம் கர்ம பலனை அனுபவித்த படி ஜீவிப்பார்கள்.ஜீவர்கள் கர்மபலன் படி சுகதுக்கத்தை அனுபவிக்க இந்த சரீரத்தில் உள்ளனர்.

இந்த உடலானது இரண்டு வகைப்படும். (ஸ்தாவரம், ஜங்கமம்). இதில் ஸ்தாவரம் என்பது மரம், செடி, கொடி போன்றவை. ஜங்கமங்கல் என்பது மூட்டை, புழுக்கள், கருப்பை இந்த மூன்றிலிருந்து தோன்றுவன. நல்வினை பயன் கொண்டவர்கள் கருப்பை வழியே உடலை பெறுவார்கள். தீவினை பயன் கொண்டவர்கள் தாவரம், மற்ற சரீரத்தை அடைவர். ஜீவன் சிவனாரின் மாயையால் மயங்குகிறான்.

ஜீவன் கனவு, விழிப்பு எனும் இரு நிலைகளில் கட்டுபடுகிறான். தூக்கத்தில் ஆனந்தத்தை அடைகிறான். மாயையால் சுகதுக்கத்திற்கு ஜீவனே காரணமாகிறான். ஆகையால் விசாரித்து அறியும் அறிவால் இங்கு ஒருவனும் துக்கத்தை அடைபவன் இல்லை. ஆதலால் ராமா நீர் துக்கத்தை விட்டுவிடு என அகஸ்தியர் போதித்தார்.

 ராமர் அதற்கு முனிவரே தாங்கள் கூறியது அனைத்தும் உண்மைகளே. எப்படி அஞ்ஞானம் நீங்கிய அந்தணரையும் கள்ளானது போதை கொள்ள செய்யுமோ அது போல ப்ராப்த கர்மாவானது விவேகியை கூட விட்டு விடாது. ஆகவே " வாழ்வதற்கு எனக்கு வழி கூறுங்கள் " என்று ஸ்ரீ ராமன் அகஸ்தியரிடம் கேட்டார்.
அகஸ்தியர் ஸ்ரீ ராமனை பார்த்து ராமா, காம குரோதங்களால் பீடிக்கப் பட்டவன் இதமான பேச்சைக் கேட்பதில்லை. 

சாகும் தறுவாயில் உள்ளவனுக்கு மருந்து எப்படி ருசிக்காதோ அப்படித்தான் இதுவும். 

அது சரி ராமா, நீ எவ்வாறு மாயாவியான ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு வருவாய்? அந்த இராவணன் ஸ்ரீ மஹாதேவரிடம் வரங்கள் பெற்றவன். அந்த வரத்தால் அவன் மூவுலகங்களையும் ஆள்கிறான்.

 அவன் வாயிலில் எல்லா தேவர்களும் குரங்குகள் போல கட்டப்படு கின்றனர். அவனை தடுப்பவர், எதிர்ப்பவர் மூவுலகிலும் இல்லை. 

 இந்திரனை வென்ற இந்திரஜித் எனும் ராவணனின் மகனும் சிவனாரிடம் வரங்கள் பல பெற்றவன். தேவர்களுக்கு எமன் போல உள்ள கும்பகர்ணன் எனும் சகோதரனும், திவ்ய அஸ்திரங்கள் உடைய விபீஷ்ணன் எனும் சகோதரனும் ராவணனுக்கு உண்டு. கோடிக் கணக்கான நால்வகை படைகள் அவனுக்கு உண்டு.

 பகைவரால் உள்ளே நுழைய முடியாத லங்காபுரி நகரும் அவனுக்கு உண்டு. அத்தகைய இராவணனை ஒருவனான உம்மால் எப்படி வெல்ல முடியும் ராமா?

அதற்கு ராமர், அகஸ்திய முனிவரே நான் க்ஷத்ரியன். என் மனைவியை இராவணன் அபகரித்து கொண்டு போய் இருக்கிறான். அவனை நான் சீக்கிரம் கொல்லாவிடில் நான் உயிர் வாழ்வதில் என்ன பயன்? எனவே உங்கள் தத்துவஞான உபதேசத்தால் எனக்கு கொஞ்சம் கூட பயனில்லை.

 எனக்கு காம, குரோதம் முதலான எண்ணங்கள் அனைத்தும் உள்ளன. அவை என் உடலை கொளுத்துகிறது. ராவணனிடம் இருந்து என் மனைவி சீதையை மீட்கா விடில் எனக்கு அவமானம். நான் உயிரை விட்டுவிடுவேன்.

எனவே உங்கள் தத்துவ ஞானத்தில் எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே தாங்கள் எனக்கு கடலை தாண்டி சென்று இராவணனை கொன்று சீதையை மீட்கும் உபாயத்தை எனக்கு குருவாக இருந்து தாங்கள் தான் கூற வேண்டும்.

அகஸ்தியர் பதில் :

ராமா, பரம்பொருளான, பார்வதி நாதரான பராபரர் ஸ்ரீ பரமேஸ்வரரை சரணடைவாயாக. அவர் மனது வைத்தால் மட்டுமே உனக்கு வெற்றி கிட்டும். போய் ஸ்ரீ சிவபெருமானை சரணடை அது ஒன்றே சிறந்த உபாயம். நான் உனக்கு தீக்ஷை செய்து வைத்து விரத முறைகளை உபதேசிக்கிறேன்.

அது படி நடந்து மனிததன்மை நீங்கி தேஜோமயமாவாயாக. சிவனாரை முறைப்படி பூஜித்து அவரிடம் வரம் பெற்று வெற்றி கொள் என்றார் அகஸ்தியர். அதை கேட்டு ராமர் துன்பம் நீங்கி புத்துணர்வு பெற்று கடலை குடித்த முனிவரான அகஸ்தியரை வணங்கினார்.

அகஸ்தியர் கூறிய படி ராமர் பாசுபத விரதத்தை அனுஷ்டித்தார்.ஸ்ரீ ராமர் உடல் முழுதும் விபூதியை பூசி கொண்டார். அகஸ்தியரிடம் " சிவ சகஸ்ரநாமத்தை " உபதேசம் பெற்றார்.

 அகஸ்தியர் சிவ சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்து வைத்து ராமா வேத சாரமான இந்த சிவ சகஸ்ரநாமத்தை இரவும், பகலும் விடாமல் ஜபித்து மனமாற ஈசனை பூஜித்து வா. பின்னர் சிவனார் உன் மீது கருணை கொண்டு உமக்கு பாசுபதாஸ்திரம் தருவார்.

 அதை வைத்து உன் எதிரியை கொன்று, உன் மனைவியை மீட்டு வெல்வாய். ஆனால் பாசுபதாஸ்திரம் கிடைக்க வில்லை என்றால் உன்னால் ராவணனை வெல்வது முடியாது. ஆகவே அதை பெற சிவனாரிடம் பரிபூரண சரணாகதி அடை என்று கூறி அகஸ்தியர் ஸ்ரீ ராமரை வாழ்த்தி விட்டு தன் ஆசிரமம் திரும்பினார்.
அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்ற ஸ்ரீ ராமர் அகஸ்தியரின் உபதேசத்தின் படி ஸ்ரீ பரமேஸ்வரரை தியானிக்க துவங்கினார்.

 ராமர் புனிதமான கோதாவரி கரையில் உள்ள மலையில் விபூதியை உடல் முழுவதும் பூசிக் கொண்டு, உடலில் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டு சிவ லிங்கத்தை ஸ்தாபித்தார்.

 லிங்கத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, வனத்தில் உள்ள மலர்கள் கொண்டு அர்ச்சித்து, கனிகளை கொண்டு பூஜித்து சிவ சகஸ்ரநாமத்தை இரவும் பகலும் ஜபித்தார். 

ஒரு மாதம் பழங்கள் மட்டும் சாப்பிட்டும், ஒரு மாதம் இலைகளை மட்டும் சாப்பிட்டும், ஒரு மாதம் தண்ணீரை மட்டும் சாப்பிட்டும், ஒரு மாதம் காற்றை மட்டும் சுவாசித்தும் ஸ்ரீ சிவ பிரானை தியானித்தார்.

அனைத்து உயிர்களின் இருதய கமலத்தில் வீற்றிருக்கும் உமையொரு பாகனும், மின்னும் மஞ்சள் நிற ஆடை தரித்தவரும், நான்கு திருக்கரங்கள் கொண்டவரும், முக்கண்ணரும், கோடி சூரிய பிரகாச ஒளியை மிஞ்சும் ஒளி கொண்டவரும், கோடி சந்திரனின் குளிர்ச்சியை விட குளிர்ந்தவரும், நாக பாம்பை பூணுலாக கொண்டவரும், புலித்தோலை ஆடையாக அணிந்தவரும், அபய வரத முத்திரைகளை தன் திருக்கரத்தில் காட்டுபவரும்,தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவரும், ஐந்து திருமுகங்களோடு சூலமும், உடுக்கையும் ஏந்தி சிரசில் பிறை சந்திரனை அணிந்தவரும், என்றும் நிலைத்திருப்பவரும், மாற்றமற்றவரும், குறைவில்லாதவரும், அழிவற்றவரும், பகவானுமாகிய பரம்பொருள் பராபரர் ஸ்ரீ பரமேஸ்வரரை தினமும் ஸ்ரீ ராமர் பூஜித்து தியானித்தார். இவ்வாறு நான்கு மாதங்கள் கழிந்தன. ஸ்ரீ ராமனும் விடாமல் ஸ்ரீ மஹா தேவரை பூஜித்து சிவ சகஸ்ரநாமத்தை கூறி வந்தார்.

நான்கு மாதங்கள் கழித்து நதிக்கரை அருகே ஒரு பெரிய சப்தம் உண்டானது. சிவனாரின் சிரிப்பால் முப்புரங்களும் எரிந்து கீழே விழுந்து விட்டதோ என்று என்னும் அளவு மிக பயங்கரமான சப்தம் உண்டானது.

அந்த ஓசையால் நடுங்கிய ஸ்ரீ ராமர் சப்தம் வரும் திசையை நோக்கி பார்த்தார். ஸ்ரீ ராமனின் முன்னால் ஒரு பேரொளி ஏற்பட்டது. அந்த ஒளியை கண்டு ராமன் திக்கு திசை தெரியாமல் நடுங்கி போய் பிரமித்து நின்றான். ராமரால் அந்த பேரொளியில் எதையும் காண முடியாமல் இது அசுரர்களின் வேலையாக இருக்குமோ என நினைத்தார்.

உடனே ராமர் தன் வில்லை ஏந்தி கொண்டு ஆக்னேயாஸ்திரம், வருணாஸ்திரம், சந்திராஸ்திரம், சூரியாஸ்திரம், மோஹனாஸ்திரம், பர்வதாஸ்திரம், விஷ்ணுசக்கரம், மஹாசக்கரம், காலச்சக்கரம், விஷ்ணு அஸ்திரம், ருத்ர அஸ்திரம், பிரம்மாஸ்திரம், குபேராஸ்திரம், வஜ்ராஸ்திரம், வாயு அஸ்திரம், பார்கவாஸ்திரம் முதலிய திவ்ய அஸ்திரங்களை அந்த பேரொளியை நோக்கி எய்தார். அந்த பேரொளியில் ஸ்ரீ ராமன் எய்திய அனைத்து திவ்ய அஸ்திரங்களும் மஹா சமுத்திரத்தில் விழுந்த சிறிய மழைத்துளி போல ஒடுங்கின. அதை கண்ட லக்ஷ்மணன் பயத்தில் மயங்கி விட்டான். ஸ்ரீ ராமனோ பயத்தில் கீழே விழுந்து கண்களை இறுக மூடி கொண்டு ஸ்ரீ சிவபெருமானை நினைத்து வணங்கினார்.

மீண்டும் முன்பு போல அந்த ஓசை அதிகமானது. பூகம்பம் வந்தது. மலைகள் அசைந்தன. அடுத்த நொடி அங்கு ஒரு குளிர்ந்த ஜோதி உருவானதை கண்களை திறந்து ராமர் பார்த்தார். அங்கு சிவனாரின் ரிஷபத்தை கண்டார். அந்த ரிஷபத்தின் மீது அம்மையப்பரான ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரரை கண்டார்..

No comments:

Post a Comment