Tuesday, May 10, 2016

சிவவாக்கியர் கருத்து

சிவவாக்கியர் கருத்துப்படி,

“அண்டர்கோனிருப்பிடம் அறிந்துணர்ந்த ஞானிகள்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே”

அதாவது, ஞானியான ஒருமனிதன் கோயிலிற்சென்று கைகூப்பி வேண்டுதல் செய்து இறைவழிபாடு நடத்துவதில்லை.

எங்கும் நிறைந்த இறைவன் உமக்குள்ளேயே இருக்கும்போது அவ்விறைவனை அந்தர்முகமாக உன்னி வணங்குவீராயின், அச்சுருக்கமற்ற சோதிவடிவினனான இறைவனை அடையலாம். அவ்வாறிருக்க,

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின்
என்று கூறி,

நெருப்புநீரு மும்முளே நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே
என்று சரியானமுறையையும் புகட்டுகின்றார்.

ஆனால், அந்தர்முகமாகச் செய்யப்படுகின்ற வெறுமையான தியானமுறைகளும் பலன்தரப் போவதில்லை. கையில் உருத்திராட்ச மாலையை வைத்து உருட்டிக்கொண்டு, கண்ணையும் சிமிட்டிக்கொண்டிருப்பினும், மனம்போவது எவ்விடம்! மனதிற்கிடக்கும் பொய், வஞ்சனை முதலானவற்றைத் துடைத்தெறியாமல் மெய்ப்பொருளை மனதின்கண் காணவும் இயலாது என்பதனை,

கைவடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடிந்த தும்முளே விரைந்துகூற லாகுமே
எனச் சுட்டிக்காட்டுகிறார்.

நல்லெண்ணத்துடன் செய்வதாயினும் கூட சிற்சில கிரியைகள் அதைச் செய்பவன் மனதிற்கு ‘நானே அதைச்செய்தேன்’ என்ற போலியான நிறைவு தருமேயல்லாமல் வேறெந்த பலனையும் கொடா என்பதனை,

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே

எனச் செய்த பூசையைக் கொண்ட பொருள் யாதென விளக்கித் தருமாறு கேட்கின்றார்.

சமைத்த கறியின் சுவையை அக்கறியைச் சமைத்த சட்டியும், கிளறும் சட்டுவமும் தெரிந்துகொள்ளாது.  பரம்பொருள் மனத்தின்கண்ணேயே இருக்க சிற்பியினால் உருவாக்கப்பட்ட கற்சிலை நிட்கள, நின்மல பர-வத்துவான பொருளாகாது என்பதனை உணர்த்த,
நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சார்த்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திர மேதடா?

என்று கேட்கிறார்.

பேதமை நிறைந்த மக்கள் அனைவரும்கூடி விழாமுதலான பேரில் செப்புச் சிலையை வைத்துச் செய்யும் பித்தலாட்டங்களையும் கடுமையாகச் சாடுகிறார் சிவவாக்கியர்.

ஊரிலுள்ள மனிதர்கா ளொருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலு மறியொணாத வாதிசித்த நாதரை
பேதையான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.

எனத் தேர்த்திருவிழா போன்ற வெறும் சமய சம்பிரதாயங்களை ஏளனம் செய்கின்றார்.

மூடநம்பிக்கைகளில் உழலும் உலகத்தவர் தங்களுக்கு ஏதாவதொரு நோய் வந்தால் கொல்லா விரதத்தை எள்ளளவும் கொண்டாடாமல், ஆடு, கோழி முதலியவற்றைப் பலி கொடுக்கும் ஈனச்செயல்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கிறார் சிவவாக்கியர். ‘அத்தகைய பாபச்செயல்களைச் செய்யத்தூண்டும் உங்களது குலதெய்வங்கள் உங்களைக் குணமாக்கப்போவதும் இல்லை. உடல்நலம் மேலும் குன்றி மூஞ்சூறு போல இளைத்துப் போவீர்களேயன்றித், தேறும் நிலை உண்டாகாது.’

தங்கள்தேகம் நோய்பெறின் தனைப்பிடாரி கோயிலிற்
பொங்கல்வைத்தும் ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே.
என்று அழுத்தமாகச் சொல்கின்றார்.

ஐம்புலன்களையும் வெல்லாது அவற்றின் வழியே செல்லும் அஞ்ஞானிகளுக்கு அன்னதானம் முதலான தருமங்கள் செய்வதும் வீணே. அத்தகைய போலித் துறவிகளுக்கு ஈகைசெய்வது தீமையையே விளைவிக்கும்.

ஐம்புலனை வென்றிடா தவத்தமே யுழன்றிடும்
வம்பருக்கு மீவதுங் கொடுப்பதும்ம வத்தமே
என்பதே சிவவாக்கியரின் அறிவுரை.

நல்ல இடங்களைத் தேடி அவற்றைச் சுத்திசெய்து பீடமிட்டு, அதன் மீது திருநீறு பூசி அமர்ந்து அருமையாகத் தவங்கள் செய்வார்கள்.  ஆனால், ஆன்மவடிவினனான இறைவன் ஒடுங்குமிடமும் உதிக்குமிடமும் யாதென்று அறிந்து பின் தவம் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகின்றார் சிவவாக்கியர்.

இடங்கள்பண்ணி சுத்திசெய்தே யிட்டபீட மீதிலே
அடங்கநீரும் பூசல்செய் தருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனா ருதிக்குஞான மெவ்விடம்
அடங்குகின்ற தெவ்விடம் அறிந்துபூசை செய்யுமே.

அதுமட்டுமல்ல,
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியேக தறியே கண்கள்மூடி என்பயன்
என்றும்,
தேடிவைத்த செம்பெலாந் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசையென்ன பூசையோ
என்றும்,

மெய்ப்பொருளாகும் இறைவனை உள்நோக்கியுணர வேண்டுமேயன்றி வெளிப்புறமான மரபுவழிச் சடங்கு வழிபாடுகளாலும், ஆசாரங்களை மேற்கொள்ளுதலாலும் எந்தப் பயனும் இல்லை என்று மனதில் பதியும்படிப் பல பாடல்களில் ஆவேசமாகக் கண்டனம் செய்கின்றார் சிவவாக்கியர். தமிழ்ச்சித்தர்கள் கடைப்பிடித்த மெய்யுணர்வு நெறிமுறையில் தனிப்பட்ட தெய்வங்களுக்கு இடமில்லை. இறைவனைப்பற்றிய ஆத்திகக் கோட்பாடு தவறான இரண்டு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட தெய்வம் என்ற கருத்து ஒன்று; படைத்தவனான இறைவன் படைப்புக்களிலிருந்து நிரந்தரமாக வேறுபட்டிருப்பவன் என்பது மற்றொன்று.  சிவவாக்கியரின் பார்வையில் எனக்கென்றொரு தனிக்கடவுள், உனக்கென்றொரு தனிக்கடவுள் என்று இருக்கமுடியாது.  ஏனெனில் அதனால் இரண்டு கடவுளர் உருவாவர்.

எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றலோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றெனில்
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.
என இடித்துரைக்கின்றார் சிவவாக்கியர்.

இரண்டற விளங்கும் இறைவனை விட்டுணு எனவும் சிவன் எனவும் பாகுபடுத்தி வணங்குவது மடமை. பொன்னாற் செய்யப்படுகின்ற நகைகள் பல வடிவம் கொண்டவையாயிருப்பினும் ஆதாரமாயிருப்பது பொன் ஒன்றே.

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே

மற்றும்,
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள்பேத மன்றியே வுண்மைரெண்டு மில்லையே
என்று, கடவுளைப் கூறுபோட்டுக்கொள்வது மனிதர்களிடமுள்ள பேதமையாலும், பேதவுணர்வாலுமே என்பதனையும் வலியுறுத்துகிறார்.

அரியுமாகி யயனுமாகி அண்டமெங்கு மொன்றதாய்
பெரியதாகி யுலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவதென்று வேறுசெய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே
எனவும் கூறி, ஒன்றே இறைவன் எனும் உண்மையை வலியுறுத்துகின்றார்.சமயம் ஒரு சமூக அமைப்பாக மாறும்போது கூடவே அதையொட்டிய நெறிமுறைகளும், வழக்கங்களும் உருவாகத் தொடங்குகின்றன. ஆனால் அவை மக்களின் சமய உணர்விலுள்ள தூய்மையை நாளடைவில் குறைத்து விடவும் செய்கின்றன.   சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பது என்பது தன்னிலை உணர்வதைவிட முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகின்றது.

காலம் செல்லச்செல்ல இவையே பெரும் தளைகளாகவும் மாறி விடுகின்றன. மெய்யறிவை நாடும் மனித சமுதாயம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடவேண்டுமென்பதே சிவவாக்கியரின் ஆவல். அந்த வகையில் உருவ வழிபாட்டையும், புண்ணியத் தலங்களை நோக்கியுள்ள யாத்திரை, தீர்த்தங்களில் முழுகுதல், தவவேடச்சின்னங்கள் அணிதல் முதலான சடங்குகளையும் அவர் அறவே மறுக்கின்றார்.  இவற்றைக் கடுமையாகக் கேலி செய்கின்ற போக்கு இவருடைய பாடல்களில் மிகுந்திருப்பதைக் காணலாம்.

உருவ வழிபாட்டை தீவிரமாகக் கண்டனம் செய்கிறார் சிவவாக்கியர்.
செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவனிருப்ப னென்கிறீர்

கல்லிலும், உலோகத்திலும் பொம்மைசெய்து வைத்துகொண்டு அதில் சிவனைத் தேடிப் பொழுதை வீணழிக்கிறீர்களே என்று வருந்துகிறார்.

உடைக்கப் பட்ட கல்லின் ஒருபகுதி வாயிற்படியில் மிதிகல்லாகவும், மற்றொரு பகுதி கருவறையுள் கடவுள் சிலையாகவும் மாறுவதைக் கண்டு சிவவாக்கியர் வியக்கிறார்.
ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டு செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவேமி திக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீருஞ் சார்த்துறீர்
ஈசனுக் குகந்தகல் எந்தகல்லு சொல்லுமே என வினவுகின்றார்.

தத்துவங்களைச் சடங்காக்கி இறைவனைக் கல்லாக்கிவிட்ட மூடர்கள் உயிரோடுயிராகக் கலந்து நிற்கும் இறைவனைக் காண மறுப்பதை எண்ணிச் சிரிக்கின்றார் அவர்.
சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள்
தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி யென்செய்வேன்
மூவராலு மறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே  என்கிறார்.

மெய்யான இறையனுபூதியை நேரடியாகப் பெறவேண்டுமேயல்லாமல் மற்றொரு உபாதிமூலமாக அதைப்பெற விழைவது மூடத்தனம் என்பதே சிவவாக்கியரின் கருத்து. சிற்பிகளின் கைவேலைப்பாடான சிலையுருவங்களை உயர்ந்த தெய்வமென்றெண்ணி அவற்றிற்குப் பெயர்களையும் இட்டு அழைக்கின்றீர்கள் அனைத்தயும் படைத்த முழுமுதற்கடவுளை உம்முள்ளத்தில் சிந்தனை செய்யுங்கள் எனும் அவரது அறிவுரையை

பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள தென்றுநீர்
எண்ணமுற்று மென்னபே ருரைக்கிறீர்க ளேழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத் தளிக்கவும்
ஒண்ணுமாகி யுலகளித்த வொன்றைநெஞ்சி லுன்னுமே
என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது.

கட்டையாற்செய் தேவருங் கல்லினாற்செய் தேவரும்
மட்டையாற்செய் தேவரும் மஞ்சளாற்செய் தேவரும்
சட்டையாற்செய் தேவரும் சாணியாற்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்ற வேறுதெய்வ மில்லையே
என்று இறைவன் உருவற்றவன் என்பதனை உறுதியாக மொழிகிறார்.

சிலைவழிபாடு ஒருக்காலும் மெய்யான இறையின்பத்தையளிக்காது என்றும் சிவவாக்கியர் முடிவாகக் கூறுகிறார்.

கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடுந் தராக்களில்
வல்லதேவ ரூபபேத மங்கமைத்துப் போற்றிடின்
தொல்லையற் றிடப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர்
இல்லையில்லை யில்லையில்லை யீசனாணை யில்லையே
ஆலய வழிபாடு, புனிதநீராடல் முதலானவற்றின் வீணான தன்மை:

சிலை வழிபாட்டைக் கண்டனம் செய்வதோடு, ஆலய வழிபாடு, ஆறுகுளங்களில் புனிதநீராடல், புண்ணியத் தலயாத்திரை முதலான நடவடிக்கைகளையும் சிவவாக்கியர் மட்டுமீறிய கடுமையுடன் இகழ்கிறார்.

யாராலும் ஆக்கவும் அழிக்கவும் இயலாத கோயிலும், குளங்களும் மனிதனின் மனத்தினுள்ளே இருக்கையில்,
கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லையில்லை யில்லையே
என்று கோயில் குளங்களை நாடுவதை விட்டுவிட்டுக் கடவுளை உங்களுக்குள்ளேயே கண்டுகொள்ளுங்கள் என்கிறார்.

நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி யோடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே என நல்ல புண்ணிய தீர்த்தங்கள் எங்கேயென்று நாடியோடும் மாந்தரை அறைகூவி விளிக்கிறார்.

கண்ணனின் பக்தையான மீராபாய் தனது பாடலில் தினமும் குளிப்பதனால் ஹரி கிடைப்பானாயின் நானொரு மீனாகவோ மற்றேதேனும் நீர்வாழ் உயிரினமாகவோ பிறக்க விழைகிறேன் எனக்கூறியுள்ளார்.  இதே கருத்தையே சிவவாக்கியரும்,

காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
அதாவது காலையும் மாலையும் தண்ணீரிலே மூழ்கினால் இறைவனருள் கிட்டுமாயின் எப்போதுமே நீரில் கிடக்கின்ற தேரையும் இறைவனுருள் பெற்றுவிடுமா? என்ற கேள்வியை விடுக்கிறார்.

இவ்வூரிலில்லாத இறைவன் அவ்வூரிலிருப்பான் என்று என்ன உறுதி?
இந்தவூரி லில்லையென் றெங்குநாடி யோடுறீர்
அந்தவூரி லீசனும் அமர்ந்துவாழ்வ தெங்ஙனே என்று கேட்கின்றார்.

தீர்த்தலிங்க மூர்த்தியென்று தேடியோடும் தீதரே
தீர்த்தலிங்க முள்ளினின்ற சீவனைத் தெளியுமே,  அதாவது
தீர்த்தம், லிங்கம், மூர்த்தி என்று ஊரூராகச் சென்று தேடுவோரே! அவை அனைத்தையும் உம்முள்ளேயே கொண்டுள்ள உம் சீவனை உன்னிப்பாகக் கவனிப்பீராக என்று அறிவுரை புகட்டுகின்றார்.  காடுமேடு குன்றுபள்ளங் கானினா றகற்றியும் நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதங் காண்பரோ? இல்லை. இறைவனை மனத்துள் அல்லால் எங்குத் தேடியும் பயனில்லை

No comments:

Post a Comment