Friday, May 22, 2015

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் / பைரவர் வரலாறு

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!
Baskar Jayaraman's photo.

உலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின்படி படைத்து வருபவர் அயன் என்ற பிரம்மன்.
அவ்வாறு படைக்கப்பட்ட மாந்தர்களை காத்து வருபவர் மால் என்ற மஹாவிஷ்ணு.
மாந்தர்களின் அனைத்து கர்மவினைகளையும் அழித்து முக்தியைத் தருபவர் ருத்ரன்.
இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!

நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர் சூரியபகவானே! ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி வருபவர் சூரியபகவான்;அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி;ஆனால்,சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குலதெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரும் இவரே!பழங்காலத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து,வழிபட்டு வந்துள்ளனர்;இந்த வழிபாடு அவ்வளவு ரகசியமாக செய்து,வளமோடும்,வலிமையோடும்,சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்;
இந்த வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது;ஆண்கள் எனில்,மதுப்பழக்கம் அறவே இருக்கக்கூடாது;எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோமோ,அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன்கள் நமக்குக் கிட்டும்;

எவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டை செய்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமது பொருளாதார நெருக்கடிகள் விலகும்;கடன்கள் தீரும்;அரசு வேலை கிடைக்கும்;நிறுவனம் வளர்ச்சியடையும்;வராக்கடன் வசூலாகும்;ஆரோக்கியம் மேம்படும்;தெரியாத குலதெய்வத்தை அறிந்து கொள்வீர்கள்;கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்;பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர்;அவ்வாறு ஒன்று சேர்ந்தப் பின்னர் ஒருபோதும் அவர்களிடையே மனக்கசப்பு வராது;குழந்தைகளின் முரட்டுசுபாவம் படிப்படியாக மாறும்;சுருக்கமாகச் சொன்னால் நமது நியாயமான லட்சியங்கள்/கோரிக்கைகள் நிறைவேறும்;கடந்த மூன்று வருடங்களில் இந்த வழிபாட்டை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் செய்து வருகின்றனர்;
18 வயது நிரம்பிய எவரும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றலாம்;தம்பதியர் ஒன்றாக தினமும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றி வந்தால் சற்றும் எதிர்பாராத அபரிதமான பலன்கள் கிட்டும்;

கையால் செய்யப்பட்ட வெல்லக்கட்டிகள் குறைந்தது இரண்டு;
மஞ்சள் துண்டு,(வசதியுள்ளவர்கள் மஞ்சள் பட்டுத்துண்டு),மண் அகல்விளக்கு ஒன்று,சுத்தமான பசுநெய் குறைந்தது 250 மிலி,சந்தன வாசம் தரும் பத்தி பாக்கெட் பெரியது இரண்டு,அரைக்கப்பட்ட சந்தனம் குறைந்தது ரூ.10/-க்கு,எவர்சில்வர் கிண்ணம் ஒன்று,காகிதத்தில் செய்யப்பட்ட தட்டுக்கள் 100(கிராமப்பகுதியில் வசிப்பவர்கள்/வீட்டிற்குள்ளேயே வாழைத்தோட்டம் வைத்திருப்போர் வாழை இலையை தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.(இவைகள் அனைத்தையும் மூன்று மாதத்திற்குத் தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம்)
தினமும் காலை 04.30 மணி முதல் காலை 06:00 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்துவருவது உத்தமம்.வீட்டின் பூஜையறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் போட்டோவை வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும்;அந்தப் படத்தின் அருகில் கிழக்கு நோக்கி( ஒரு மஞ்சள் துண்டின் மீது-இந்த வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்;ஒருபோதும் வேறு எந்த காரியத்திற்கும் இதைப்பயன்படுத்தக்கூடாது) அமர்ந்து கொள்ள வேண்டும்;செவ்வரளி மாலையை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்க வேண்டும்;(தினமும் முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது).கிழக்கு நோக்கி மண்விளக்கில் நெய்தீபம் ஏற்ற வேண்டும்;சந்தனத்தை தண்ணீரில் குழைத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் நெற்றியில் நமது மோதிர விரலால் வைக்க வேண்டும்;பிறகு அவரது பாதத்திலும்,பிறகு ஸ்ரீஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி,சூலாயுதம்,அமிர்தகலசம் போன்றவைகளில் வைக்க வேண்டும்;குங்குமம் வைக்கக் கூடாது;பிறகு,சந்தனப் பத்தியை பொருத்தி அவருக்குக் காட்ட வேண்டும்;பத்தி ஸ்டாண்டில் வைத்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றியை ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுப் பாடக்கூடாது)

இவ்வாறு பாடுவதற்கு முன்பே,வீட்டில் சமையல் முடிந்திருந்தால்,நாம் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் சாதத்தை வைக்க வேண்டும்;அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்க்க வேண்டும்;இந்த வெல்லத்தூள் சேர்த்த சாதக்கிண்ணத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்;பல வீடுகளில் மேலே கூறியபடி வழிபாடு செய்யும் போது சமைத்திருக்க மாட்டார்கள்;எனவே,இந்த வழிபாடு முடித்துவிட்டு,எப்போது சமையல் நிறைவடைகிறதோ அப்போது மேலே கூறியவிதமாக படையலை வைக்க வேண்டும்.

இரவில் தூங்குவதற்கு முன்பு(வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு முன்பு) படையலாக காலையில் வைத்த வெல்லம் கலந்த சாதத்தை கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணம் அல்லது காகிதத் தட்டில் கொட்டி,வீட்டிற்கு வெளியே ஓரமான இடத்தில் வைத்துவிட வேண்டும்.பல நாட்கள்/வாரங்கள் கழித்து பைரவர் வந்து இந்தப் படையலைச் சாப்பிடுவதைக் காண்பீர்கள்;அதுவரை ஒவ்வொரு நாளும் நாம் வீட்டிற்கு வெளியே படையல் வைப்பதோடு நமது வழிபாடு நிறைவடைந்துவிடுகிறது.

இந்த வழிபாட்டுமுறையை செய்து வரும் நாட்களில் தீட்டு நிகழ்ச்சிகளில்(ஜனனம்,ருது,சிவனடி சேர்தல்) கலந்து கொண்டால் 30 நாட்களுக்கு இந்த வழிபாட்டுமுறைக்கு விடுமுறை விடுவது அவசியம்;
பல குடும்பங்களுக்கு ஒரே ஒரு அறைதான் வீடாகவே இருக்கிறது;அவர்கள் அந்த ஒரே ஒரு அறையில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்;பெரும்பாலும் இல்லத்தரசிகளே செய்வது நன்று;அவ்வாறு இல்லத்தரசிகள் வழிபாடு செய்து வரும் நாட்களில்,உடன் தமது மகளுக்குப் பயிற்றுவிப்பது நன்று;ஏனெனில்,மாதத்தில் சில நாட்களில் தனக்குப் பதிலாக தமது மகளைக் கொண்டு(மாற்று ஆள்) வழிபாடு செய்து கொள்ளலாம்;

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது,ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறையும்,நமது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்;அல்லது நமது நியாயமான நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறத் துவங்கும்;குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சம் நமது ஆயுள் முழுவதும் வீட்டில் இந்த வழிபாட்டைச் செய்து வர சகல சம்பத்துக்களும் நம்மைத் தேடி வரும்;அவ்வாறு வரும் சம்பத்துக்கள் மூன்று தலைமுறை வரை நிலைத்து நிற்கும்;

தொலைதூர மாநிலங்கள்,அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மேலே கூறிய பொருட்களில் ஏதாவது ஒருசில பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுவர்;அவர்கள் நெய்தீபம் ஏற்றிவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றி/சொர்ணபைரவ அஷ்டகம் இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் தினமும் பாடிவருவது போதுமானது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்கப்படும் செவ்வரளி மாலையை 24 மணி நேரத்திற்குள் எடுத்துவிடவேண்டும்;காய்ந்த பூக்கள் ஒருபோதும் அவரது படத்தின் மீது இருக்கக் கூடாது;இவருக்கு ஒருபோதும் மல்லிகைப் பூக்கள் அணிவிக்கக்கூடாது.கோவிலில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகாலபைரவர்;வீட்டில் வழிபட உகந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!

-----------------------------------------------------------------------------
பைரவர் வரலாறு
பைரவர் வரலாறுநம் பாபத்தை நீக்கி, பயத்தினை நீக்குபவர் பைரவர்.படைத்தல், காத்தல், அழித்தல் (அதாவது ஒடுக்குதல்) ஆகிய தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம்  அளிக்கப்பட்டது.

உடுக்கை படைத்தல் தொழிலையும், கையில் உள்ள கபாலம் படைத்தல் தொழிலையும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

ஆனந்த பைரவராக உலகைப் படைப்பவர்,    கால பைரவராக உலகை காக்கின்றார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.
இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.
பைரவரின் சிறப்பு வடிவங்கள் -
பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.

ஸ்ரீபைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயானது பைரவருக்கு பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது.
நகரத்தார் கோவில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.
ஸ்ரீ சொர்ண பைரவர் -
செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் இலக்குமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுள் ஸ்ரீ சொர்ண பைரவர். ஒவ்வொரு இல்லத்தின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ சொர்ண பைரவரின் படம் அல்லது பொற்காசு அல்லது டாலர் போன்றவற்றை வடக்குத் திசை நோக்கி வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இப்படத்திற்கு நல்ல மணமுள்ள வண்ண மலர்களை மாலையாக அணிவித்து தாம்பூலம், பழம், தேங்காயுடன் மூன்று வேளையும் பூஜை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அவல் பாயாசம் விருப்பமான நைவேத்தியமாகக் கூறப்படுகிறது. மிகவும் எளிமையான இந்த நைவேத்தியத்திற்கு மனமிரங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் இல்லங்களில் செல்வ மழையைப் பொழியச் செய்வார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சொர்ண பைரவர் படத்தினை கார், மோட்டார் சைக்கிள், வீட்டு வாசற்படி, வரவேற்பறை போன்ற பலரின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. புனிதமான பூஜை அறையில் அல்லது பூஜை செய்யப்படும் இடத்தில் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் படத்தில் அணிவிக்கப்படும் பூமாலை அல்லது பூக்களை வாடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய பூக்களையோ பிளாஸ்டிக் காகிதப் பூக்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் அணிவிக்கக் கூடாது.
பிரம்மன் ஆணவத்தை அழித்த பைரவர் -
ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மன். உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி
செய்தார். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.
பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார். இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்து நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.
பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் பிட்க்ஷை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷைபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று.
பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, "உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக'' என அருளினார். பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது.
அந்த இடத்தில் இருந்த விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, குற்றாலம் அருகில் உள்ளது.

No comments:

Post a Comment