Wednesday, July 8, 2015

தரப்பாக்கம் கைலாசநாதர் கோயில

தரப்பாக்கம் கைலாசநாதர் கோயில்
--------------------------------------------------
தொன்மையான காலத்தில் பற்பல சித்தர்கள், இத்திருத்தலத்தில் தங்கி, சிவபெருமானை உருவாக்கி வழிபட்டு நின்றனர். சித்தர்கள் சித்தி பெற்று தமது எண்ணம் பூர்த்தியான பிறகு மறைந்திருந்து மாற்று பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வந்தனர். அப்போது அவர்கள் உருவாக்கி வழிபட்ட லிங்கமே இன்று நமக்கு கைலாசநாதராக வடிவெடுத்து நிற்கின்றார். அத்ரி போக மூல ஞானப் பொய்யா உரோம வகத்திய ரேத்திய அய்யங் கயிலாயநாதனே கருதிய வானந்தவல்லி யம்மையாளையாண்டனே தரவாக்க தலைமுறைவானே மறவா னேயொரு பொழுதுமே’’ - என்றார் கருவூர் சித்தர். இத்திருக் கயிலாயநாதனை, ஆனந்தவல்லி அம்பிகை மணாளனை அத்ரி, போகர், திருமூலர், பொய்யாமொழியார், உரோமர், அகத்தியர் என எண்ணற்ற சித்தர்கள் தொழுதிருக்கிறார்கள். கருவூர் சித்தரின் பாடல்படி, அன்னையின் பெயர் ஆனந்தவல்லி அம்பிகை.

‘‘ தோடங் கறுக்கியே மங்களத்தை கூட்டியே தனத்தை பீறிட வைப்பாள் பொற்பாதம் போற்றுதுமே’’ - என்றார் குதம்பைச் சித்தர். தோஷம் எதுவாயினும் அழிக்கும் ஆற்றல் உடையவள் இந்த ஆனந்தவல்லி அம்பிகை. செவ்வாய் தோஷம், நாகதோஷம், புத்திரதோஷம், காலசர்ப்ப தோஷம், சனி தோஷம் போன்ற நூற்றி அறுபத்து எட்டு தோஷங்களையும் தம்மை தொழுது நிற்கும் பக்தனுக்கு போக்கியருள்பவள் என்பது சித்தர் வாக்கு. சித்தர் சொல்லுக்கு மாற்று சொல் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. பொதுவாக ராகுவோ கேதுவோ சூரிய சந்திராதிகளை விழுங்குவதாகவே சித்தர்கள் பேசுகின்றனர். இப்படி விழுங்கும் காலமே சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்பர் வானவியல் நிபுணர்கள்.

பொதுவாக கிரகண காலத்தில் வெளியே போகக்கூடாது. சூரியன் அல்லது சந்திரனின் நிழல் நம் மேல் விழக்கூடாது. சூரிய சந்திர கிரகணங்களை வெறுங்கண்ணால் பார்க்கக்கூடாது என்பது பெரியோர்களும், சில நேரங்களில் விஞ்ஞானிகள் கூட கூறுவதை நாம் அனுபவபூர்வமாய் கண்டிருக்கின்றோம். ஆனால், அப்படி சூரிய-சந்திர கிரகணகாலத்தில் திருப்பதி உள்ளிட்ட மிகப் பிரசித்தி பெற்ற கோயில்கள் பூட்டப்பட்டிருக்கும். ஆனால், இந்த தரப்பாக்கம் சிவபெருமானாம் கைலாசநாதர் ஆலயம் திறந்தே இருக்கும். ‘‘காசினியில் கைலாச நாதனே காக்குமிறை யோதினோம் ஒப்பிலா வப்பன் பகுதி மதி கிரகணப் பீடைகறுக்கவே காத்து நிற்பான் தன்னம்பலக் கதவு திறந்தே’’ - என்றார் பாம்பாட்டிச் சித்தர்.

எல்லா கோயில் கதவுகளும் கிரகணதோஷத்திற்குப் பயந்து சாத்தி இருக்கையில் தோஷம் நீக்க, பக்தர் தம் குறை போக்க தம் ஆலய கதவுகளை கிரகண வேளையில் திறந்து வைத்து பூஜை செய்ய வரம் தருகின்றார் கைலாசநாதர். ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்கையில் கிடைக்கும் சக்தியைப் போல ஆயிரத்து எட்டு மடங்கு சக்தி சூரிய-சந்திர கிரகண வேளையில் உச்சரிக்கையில் கிடைக்கிறது. ஆக கைலாச நாதர் ஆலயத்தில் சூரிய கிரகண - சந்திர கிரகண காலத்தில் மந்திரம் உச்சாடனம் செய்து தொழ செல்வம் பெருகுகிறது. கல்வித் தடை நீங்குகின்றது. மாணவர்கள் கல்வியில் ஓங்கி கீர்த்தி மிக பெற்று வாழ்வில் சிறக்கின்றார்கள் என்பதனை உரோமர் எனுஞ் சித்தர் தமது பாடலில், ‘‘தாரபாக்க கைலாசனை முத்தை மணியை கோமளத்தை கொண்டாடுவார் கிரகண காலமாயின் செல்வந்தராய் பரிணமிப்பரே கல்வி விருத்தி பெற்றே அவர் தம் வாரிசு வளம் பெறுமே’’
- என எளிமையாக விளக்கி உள்ளார்.

கைலாச நாதர் மேற்கு நோக்கி அருள்பாலிப்பதினால் சனியினால் உண்டாகும் அவதி இவரை ஆராதிப்போர்க்கு கட்டாயம் அகலும். ‘‘மந்தனால் பட்ட கொடுமை யோடுமே படுந்துயரகலுமே பஸ்ஸிமமே யருளும் கயிலாய நாதனை கிரகணகாலத்து அபிஷேகித்து நிற்பார் தமக்கே’’ - என்றார் காக புஜண்டர் எனுஞ் சித்தர். மேற்கு நோக்கி அருளும் கயிலாயநாதரை கிரகணகாலத்தில் அபிஷேகம் செய்து ஆராதிப்போர்க்கு சனிபகவான் நல்லருள் சுரந்து ஏற்றமான வாழ்வை தருவான் என்பதாகும். இது கிரகணகோயில் என்பதற்கு அடையாளமாக சூரிய-சந்திரரை ராகு-கேது விழுங்கும் சிற்பம் இங்குள்ளது. முழுமதி தன்னில் ப்ரத்யங்கிரா காயத்ரி மற்றும் சுதர்சன யாகம் செய்தால் கல்வி விருத்தி, செல்வ விருத்தி, விரோதிகள் நாசம் ஏற்படும் என்றார் கோளர் எனுஞ் சித்தர்: ‘‘கல்வியொடு தனமும் சூன்ய நாசமொடு வைரியருமழிய முழுமதி சக்கர ப்ரத்யங்கிரா மாதா வேள்வி யாற்றுதுமினே’’

No comments:

Post a Comment