Thursday, April 14, 2016

சித்திரை தமிழ்ப்புத்தாண்டா? தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு !

🔴சித்திரை ஒன்று தமிழ்ப்புத்தாண்டா?🔴

 தமிழ் அறிஞர்களான மறைமலையடிகள், பாவலேறு பெருஞ்சித்தனார் கூறியது.

தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா?


அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும்தமிழர்க்கும் மரியாதையாய்இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலை நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின்  பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை"நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி"நான் உங்களிடமே பெண்ணாக இருந்து ----- கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை"யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் வாழ்ந்து கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில்  ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.

 தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆரியக் கதை இப்படி இருக்க, தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.  வைகறை,காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும்அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.


அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை,தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிகநுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதேஉண்மையுமாகும். பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)

2.    முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3.    கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4.    கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5.    முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)

6.    பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.  சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.  காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும்பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.  இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம்.

இதுகுறித்து  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்,  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாகத் தமிழர்கள் கொண்டாடி வந்துள்ளனர். என்பதை அரண் செய்கின்ற வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் நம்மால் காணமுடிகிறது. .

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்

தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. படிப்பறிவில்லா பாமரமக்கள் வழக்கிலும் “தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று இன்றும் வழங்கி புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் காண முடிகிறது. இவை எல்லாம் தைத் திங்கள் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தை பறைசாற்றுகின்றன.

மேலும் உலகத்தில் இயற்கை என ஒன்று இருக்கின்றது. அது எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவம் என்னும் மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் எனவும் வழங்குவர்.

எனவே, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆகவே, இந்நாளைத் தமிழர்கள் தம் ஆண்டுத் தொடக்கமாகக் கொள்வது இயற்கையின் இயக்கத்திற்கு உட்பட்டு இருப்பதும் இங்கு எண்னத்தக்கது.

தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக தொன்று தொட்டு இருந்து வந்தாலும், இடைக்காலத்தில் பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை ஆரியர்களின் அரவணைப்பில் மெல்ல மெல்லத் தன்னிலையிலிருந்து வழுவியும் மாறியும் மறுவியும் திரிந்தும்போன நிலைதான்.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகள், ஐந்திறக் குறிப்புகள், நாள், விண்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், பஞ்சாங்கம், தினம், நட்சத்திரம், திதி, மாதம். லக்னம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரிய மயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது. ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டது.
ஆரியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கு அதிமாக தமிழர் வாழ்வியல் சமய நெறிகளில் நேர்ந்துவிட்ட நிலையில், தமிழர்கள் வாழ்வும் வளமும் உயரவும், தனித்து இலங்கவும் தைத் திங்கள் முதல் நாளே தமிழ் ஆண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்த 500 தமிழ் அறிஞர்கள் 1921 இல். நம் அருட்குருநாதர் அறிவுக்கடல் அருட்டிரு மறைமலையடிகள் தலைமையில் ஒன்ரு கூடி வரலாற்றுச் சிறப்புமிக்க சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
அக்கூட்டத்தில் சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லாச் சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி, தத்தம் சமய வேறுபாடு களையும் கொள்கை மாறுபாடுகளையும் விட்டு ஒதுங்கி ஆய்வுமுறைகளின் அடிப்படையில்; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு, தமிழ் ஒன்றையே முதன்மைப் படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு மிக விரிவாக ஆய்ந்து,
திருவள்ளுவர் காலம், கி.மு. 31 என்றும், அதுமுதல் தமிழுக்குரிய காலங்காட் டியைத் தொடருவது என்றும், அதற்கு திருவள்ளுவர் ஆண்டு எனப் பெயர் சூட்டுவது எனவும் தீர்மானித்தனர். அத்துடன் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர். அம்மூன்று உண்மைகள்:
1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைக் கூட்டித் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட வேண்டும்

அன்று முதல் தொடங்கி உலகெங்கணும் வாழும் தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.
டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் முற்காலத்தில் ஆண்டுப் பிறப்பு எனத் தை முதல் நாளையே பழங்காலத்தில் பெரியோர்கள் கொண்டாடினர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகக் கவிஞர்களில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று பாடிச் சென்றுள்ளார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், அறிவியல் அறிஞர் ஐரா வதம் மகாதேவன் போன்ற தமிழாய்ந்த தலை சிறந்த சான்றோர்கள் பலரும் தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினம் என்றே - உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள்.
உலகின் பழமையான இனமாகிய நம் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.

நாமும் இனி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள், தமிழர் திருநாள் எனக் கொண்டாடுவோம்.

அத்திருநாளில் நம் வாழ்க்கைக்கு அடிப்படையான உணவை நல்கும் உழவுத் தொழிலுக்கு உற்ற துணையாக உள்ள பரிதியையும் (சூரியன்), ஆனினத்தையும் (காளை) போற்றி மகிழ்ந்தி பொங்கலிட்டுப் படைத்து மகிழ்வோம்!
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்! வெலக தமிழன்!
பொங்கலோ பொங்கல்! 

No comments:

Post a Comment