Monday, March 7, 2016

பஞ்சதசி மந்திரம்

பஞ்சதசி மந்திரம்

பஞ்சதசி மந்திரம்
லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் பதினைந்து பீஜங்களை கொண்ட பஞ்சதசி மந்திரமாகும். பீஜம் என்பது தனியே ஒரு சமஸ்க்ருத எழுத்தினை மட்டும் கொண்டதல்ல. உதாரணமாக ஸ என்பது ஒரு சமஸ்க்ருத எழுத்தினைக்கொண்ட பீஜம், ஹ்ரீம் என்பது பல எழுத்துக்களை கொண்ட பீஜம். சமஸ்க்ருதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் உண்டு.

உதரணமாக முதலாவது எழுத்தான் "அ" வினை எடுத்துக்கொண்டால் அது ஓம் என்ற பிரணவத்தினை தோற்றுவிப்பது, அது ஒருமைப்படுத்தலையும், அழிவற்ற தன்மையினையும் தரும்.

பீஜங்க்களின் அர்த்தம் அது பாவிக்கப்படும் இடத்தினை சார்ந்து பொருள் கொள்ளப்படும்.

பஞ்சதச என்றால் பதினைந்து என்று பொருள். இந்த மந்திரம் பதினைந்து எழுத்துக்களை கொண்டுள்ளது, அதனால் பஞ்சதசி எனப்படுகிறது. பஞ்சதசி மந்திரம் பீஜங்களை முன்று பகுதிகளாக கொண்டுள்ளது. ஒவ்வொரு வரியும் கூடம் எனப்படும், இந்த மூன்று கூடங்களும் முறையே வாக்ப கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம் எனப்படும்.

வாக்ப கூடம் லலிதாம்பிகையின் முகத்தினையும், காமராஜ கூடம் கழுத்தி தொடக்கம் இடை வரையிலான பகுதியையும், இடைக்கு கீழ்பகுதி சக்தி கூடத்தினையும் குறிக்கும்.

இந்த மூன்று கூடங்களும் லலிதாம்பிகையின் முழுவடிவத்தினால் ஆக்கப்படிருக்கின்றது. இந்தக்காரணத்தினால்தான் பஞ்சதசி மிக சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது.

இந்த முன்று கூடங்களையும் முக்கோணமாக ஒழுங்குபடுத்த வரும் கீழ் நோக்கிய கோணம் தேவியின் யோனியினை குறிக்கும். இதுவே பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலம். இதனால் இந்த மந்திரம் மிக இரகசியமானதாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாகப கூடம் முக்கோணத்தின் வலது புறம், காமராஜ கூடம் மேற்புறம், சக்தி கூடம் முக்கோணத்தின் இடது புறம் காணப்படும்.

வாக்ப கூடம் ஐந்து பீஜங்களை கொண்டுள்ளது; க - ஏ - ஈ - ல - ஹ்ரீம்
காமராஜ கூடம் ஆறு பீஜங்களை கொண்டுள்ளது; ஹ - ஸ - க - ஹ - ல - ஹ்ரீம்
சக்தி கூடம் நான்கு பீஜங்களை கொண்டுள்ளது; ஸ - க - ல - ஹ்ரீம்

இந்த பதினைந்து பீஜங்களும் பஞ்சதசி எனப்படும். இந்த மந்திரம் எந்த நூலிலும் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. கீழ்வரும் சமஸ்க்ருத ஸ்லோகம் மூலம் பரிபாஷையாக கூறப்பட்டுள்ளது.
அந்த ஸ்லோகம் வருமாறு,

காமோயோனி; கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ரா/
புனர் குஹ ஸகலா மாயாய க புருசேச விஸ்வமாதாதி வித்யா//

இந்த ஸ்லோகத்தில் பஞ்சதசியின் பதினைந்து பீஜங்களும் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மந்திரத்தின் இரகசியத்தன்மை புலனாகிறது.
இந்த ஸ்லோகத்தில் உள்ள பதினைந்து பீஜங்களும் வரும் முறை வருமாறு;
காமோ (க) யோனி; (ஏ) கமலா (ஈ) வஜ்ரபானிர் (ல) குஹ (ஹ்ரீம்) ஹ (ஹ) ஸ (ஸ) மாதரிஷ்வ (க) அப்ரம் (ஹ) இந்த்ரா (ல)/
புனர் (மீண்டும் வருதலை குறிக்கும்) குஹ (ஹ்ரீம்) ஸகலா (ஸ , க, ல) மாயாய (ஹ்ரீம்) க () புருசேச விஸ்வமாதாதி வித்யா.

முதலாவது கூடம் ஐந்து பீஜாட்சரங்களை கொண்டுள்ளது - க - ஏ - ஈ - ல - ஹ்ரீம்.
மூன்று கூடங்களும் ஹ்ரீம் பீஜத்துடன் முடிவுறுகின்றன. இந்த ஹ்ரீம் பீஜம் ஹ்ரில்லேகா எனப்படும். இந்த ஹ்ரில்லேகா பீஜம் பல முக்கியத்துவங்கள் உடையது, மாயா பீஜம் எனவும் அழைக்கப்படும். வாக்ப கூடம் அக்னி கண்டம் எனவும் அழைக்கப்படும். இது லலிதாம்பிகையின் ஞான சக்தியினை குறிக்கும். க என்பது பிரம்மா, படைத்தலை செய்பவர், ஏ என்பது சரஸ்வதி ஞானத்தின் அதிபதி, ஈ என்பது லக்ஷ்மி, ல இந்திரன், ஹ்ரீம் என்பது சிவ சக்தி ஐக்கியம். க என்ற பீஜம் காம பீஜ மந்திரமான க்லீம் இற்கு மூலமானது.

அத்துடன் இந்த க பீஜ மந்திர சக்தி சாதகனுக்கு அமைதியினையும் செல்வத்தினையும் தரும் வல்லமை உள்ளது. அடுத்த பீஜமான "ஏ" என்பது சாதகனுடைய துரதிஷ்டங்களை விலக்கும். ல என்ற பீஜம் சாதகனுக்கு வெற்றியினை தரும். ஆக முதல் நான்கு பீஜங்களும் சாதகனுக்கு அமைதி, செல்வம், துரதிஷ்டங்களை விரட்டல், புனிதத்துவம், மற்றும் இந்திரனைப்போன்ற வல்லமையினை தரும்.
இதன் பொருள் சாதகன் தான் எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியினை பெறுவான் என்பதாகும். (இந்திரன் அனைத்து தேவர்களதும் தலைவன், எல்லாக்காரியங்களிலும் வெற்றி பெறுபவன்).
ஹ்ரீம் என்ற பீஜம் மொத்தம் பன்னிரெண்டு எழுத்துக்களால் ஆனது. ஹ+ர்+ஈ+ம் ஆகிய நான்கும் பிந்து வும் சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உருவாகின்றது. இந்த பிந்து என்பது கடைசி எழுத்தான ம் இற்கு மேல் காணப்படுவது. இந்த பிந்துவில் மேலும் எட்டு பீஜங்கள் அடங்கி இருக்கும். அவையாவன் அர்த்தசந்திர, ரோதினி, நாத, நாதாந்த, சக்தி, வ்யாபிக, சமனா, உன்மானி இந்த எட்டையும் சேர்த்து பிந்து நாத என்று அழைக்கப்படும்.

இந்த எட்டும் மற்றைய நான்கு பீஜங்களும்(ஹ+ர்+ஈ+ம்) சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உருவாகின்றது. இந்த பிந்து உச்சரிப்பில் முக்கியத்துவம் உடையது. ஒவ்வொரு பீஜத்திற்கும் அதனை உச்சரிப்பதற்கான கால அளவு உள்ளது. இந்த முதலாவது வாக்ப கூடத்தின் உச்சரிப்பிற்கு பதினோரு மாத்திரை அளவு இருக்கவேண்டும் என்பது விதி (மாத்திரை என்பது கண்ணிமைக்கும் அளவினைக் குறிக்கும், ஒரு செக்கனை விட குறைவான காலம்).
பீஜங்களை உச்சரிப்பதற்கு விதிகள் உள்ளன. வாக்ப கூடத்தினை உச்சரிக்கும் போது மூலாதார சக்கரத்திலிருந்து அனாகத சக்கரம் வரை அந்த மந்திர சக்தியினை அக்னி சொருபமாக உருவகித்து உச்சரிக்க வேண்டும்.
இரண்டாவது கூடமான காமராஜ கூடம் அல்லது மத்திய கூடம் லலிதாம்பிகையின் கழுத்து தொடக்கம் நாபி வரையிலான பகுதியினை தியானிக்க வேண்டும். இந்தக்கூடமே அதிகளவு பீஜங்களை உடையது, மொத்தம் ஆறு பீஜங்கள். அவை ஹ - ஸ - க - ஹ - ல - ஹ்ரீம். இவற்றில் க, ல, ஹ்ரீம் ஆகிய மூன்றும் ஏற்கனவே விபரிக்கப்பட்டுவிட்டது. புதிதாக இரண்டு பீஜங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஹ இரண்டு தடவை வருகிறது.
முதலாவது ஹ சிவனையும், இரண்டாவது ஹ ஆகாய தத்துவத்தினையும் (சௌந்தர்ய லஹரி 32 ஸ்லோகம் இந்த இரணடாவது ஹ சூரியனை குறிக்கின்றது எனக்கூறும்) இடையில் உள்ள ஸ விஷ்ணுவினையும் குறிக்கும்.
பஞ்ச பூதங்களில் ஸ என்பது வாயு பூதத்தினை குறிக்கும். ஹ என்ற பீஜம் அலி பீஜம் எனவும் குறிப்பிடப்படும். இதனாலேயே ஹ்ரீம் பீஜம் சிவ சக்தி ஐக்கியம் எனக்கூறப்படுகிறது. முதலாவது கூடத்தில் பிரம்மா குறிப்பிடப்பட்டது, ஆதலால் அது படைத்தலுடன் தொடர்புடையது. இந்த கூடத்தில் விஷ்ணு குறிப்பிடப்படுவதுடன் இந்தக்கூடம் காத்தலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தக்கூடம் 11.50 மாத்திரை அளவில் உச்சரிக்கப்பட வேண்டியது.
இதனை உச்சசிக்கும் போது அனாகதத்திலிருந்து ஆஞ்சா வரையில் கோடி சூரிய பிரகாச ஒளி பயணிப்பதாக தியானிக்க வேண்டும். இந்த கூடம் சூரிய கண்டம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பிரம்மத்தினுடைய இரண்டாவது தொழிலான காத்தல் தொழிலிற்கான சக்தியினை வழங்குவது. இது காத்தலுடன் தொடர்புடையதால் இச்சை இணைந்தே இருக்கும்.
மூன்றாவதும் கடைசியுமான கூடம் சக்தி கூடம் எனப்படும். இதில் நான்கு பீஜங்கள் உள்ளன. இது லலிதாம்பிகையின் நாபி தொடக்கம் பாதம் வரையிலான பகுதியாக தியானிக்க வேண்டும். இதிலுள்ள பீஜங்கள் ஸ - க - ல - ஹ்ரீம் ஆகும். முதலாவது கூடம் ஐந்து பீஜங்கள், இரண்டாவது ஆறு பீஜங்கள், முன்றாவது நான்கு பீஜங்கள் உடையது.
இதன் மூலம் காத்தலுக்குரிய சக்தியில் அதிக பீஜங்களும் அழித்தலுக்குரிய கூடத்தில் குறைந்தளவு பீஜங்களும் காணப்படுவதன் மூலம் காத்தலுக்கு அதிக சக்தியும் அழித்தலுக்கு குறைந்த சக்தியும் தேவை என்பதை உணரலாம். வாக்ப கூடம் சூஷ்ம புத்தியினை குறிக்கும். காமராஜ கூடம் உயர்ந்த வீரத்தினையும், செல்வம், புகழ் ஆகியவற்றை தரும், மூன்றாவது சக்தி கூடம், முதலிரண்டு கூடங்களில் உள்ளவற்றை விரித்து ஆற்றலை கொடுக்கும்.
மத்திய கூடத்தில் உள்ள இரண்டு "ஹ" பீஜம் நீக்கப்பட்டு மூன்றாவது சக்தி கூடம் உருவாகின்றது. இந்த மூன்றவது கூடம் எட்டு அரை மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டியது. முழு பஞ்சதசி மந்திரமும் முப்பத்தியொரு மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டியது. தொடர்ச்சியான ஜெபத்தில் ஒவ்வொரு கூடத்திற்கும் இடையில் நேர இடைவெளி இன்றி இருபத்தியொன்பது மாத்திரை அளவில் ஜெபிக்க வேண்டும்.
இந்த மாத்திரை அளவுகள் மானசீக ஜெபத்திற்கு கணக்கில் கொள்ளத்தேவை இல்லை. இந்தக்கூடத்தினை அனாகதத்தில் இருந்து நெற்றி வரை கோடி சந்திர பிரகாசமாக தியானிக்க வேண்டும். அனாகதத்தில் இருந்து நெற்றியினை அடைவதற்கு ஒன்பது நிலைகள் உள்ளன. இந்த ஒன்பது நிலைகளும் முன்னர் விளக்கிய ஹ்ரீம் பீஜத்தில் உள்ள நாதத்தின் பகுதிகள்.
இந்தக்கூடம் சந்திர கண்டம் எனப்படும், இது பிரம்மத்தின் மூன்றாவது செய்கையான அழித்தலை குறிக்கும். அழித்தல் "ல" என்ற பீஜத்தால் குறிப்பிடப்படும். பொதுவாக "ல" ஆயுதங்களான சக்கரம், வஜ்ரம், திரிசூலம் ஆகியவற்றை குறிக்கும். பஞ்சதசியில் உள்ள மூன்று ஹ்ரீம் பீஜங்களும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் குறிக்கும்.
ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹரியின் 32 ஸ்லோகத்தில் பஞ்ச்சதசியின் பீஜங்கள் பற்றி மறைவாக பேசுகிறார். இரண்டாவது கூடத்தில் உள்ள இரண்டாவது "ஹ" பீஜம் ஆகாய பூதம் இன்றி சூரியனை குறிப்பதாக கூறுகிறார். ஒவ்வொரு பீஜத்திற்குமான விளக்கங்கள் ஒவ்வொரு அறிஞருக்கு ஏற்ப வேறுபடும்.
ஒரு மாலை (108) பஞ்சதசி ஜெபம் செய்வது முன்று மாலை பூர்ண காயத்ரி ஜெபிப்பதற்கு சமம் எனக் கூறப்பட்டுள்ளது. பூர்ண காயத்ரி என்பது காயத்ரி மந்திரத்தின் இறுதியில் " பரோ ராஜஸே ஸாவதோம்" என்ற வரியினை சேர்த்து ஜெபிப்பதாகும்.

https://www.youtube.com/watch?v=p4fo-vZtLX8


No comments:

Post a Comment